புதுடெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 90 சதவீத மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று ராகுல்காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:எனக்கு ஜாதியில் ஆர்வம் இல்லை. ஆனால் நீதி மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. 90 சதவீத மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நான் சொல்கிறேன்.
நாங்கள் எந்தவித நடவடிக்கை எடுப்போம் என்று கூட நான் இன்று வரை கூறவில்லை. எவ்வளவு அநீதி இழைக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்போம் என்றுதான் சொன்னேன். அதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது. காயம் அடைந்து, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று நான் சொன்னால், அதை யாரும் எதிர்க்க வேண்டாம். அநீதி இழைக்கப்பட்ட 90 சதவீத மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே எனது வாழ்க்கைப் பணி. எங்கள் அரசு அமைந்தவுடன், முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மோடி தேர்வு செய்து தொழிலதிபர்களுக்கு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியில் இருந்து, 90 சதவீத மக்களுக்கு ஒரு சிறிய தொகையை காங்கிரஸ் திருப்பி தரப்போகிறது. காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் குறித்து நாங்கள் கணக்கிட்டுள்ளோம். நாங்கள் எதை நியாயம் என்று உணர்ந்தோமோ அதை அறிவித்தோம். அந்த உதவி நிச்சயம் வழங்கப்பட வேண்டும், அதை நாங்கள் தேர்தல் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். இதில் எனக்கு அரசியல் பிரச்னை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது எனது வாழ்க்கை நோக்கம்.
நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எந்த சக்தியும் சாதிக் கணக்கெடுப்பைத் தடுக்க முடியாது. அந்த பணி எவ்வளவு நிறுத்தப்படுகிறதோ, அவ்வளவு பெரிய சக்தியுடன் திரும்பும். அரசியலில் சமரசம் செய்யலாம் ஆனால் வாழ்க்கைப் பணியில் சமரசம் செய்ய முடியாது. எனது வாழ்க்கை பணிக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது.
650 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 100 பேர் மட்டுமே 90 சதவீத மக்களைச் சேர்ந்தவர்கள். நீதித்துறையிலும் இதே நிலைதான் உள்ளது. நாட்டின் முதல் 200 நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் அல்லது ஓபிசி இல்லை. இந்த நிறுவனங்களில் இருந்து 25 பேருக்கு 16 லட்சம் கோடி ரூபாயை மோடி வழங்கியுள்ளார். இந்த நிதியை கொண்டு விவசாயிகளின் கடனை 25 முறை தள்ளுபடி செய்ய முடியும். ஒரு தேசபக்தனுக்கு என்ன வேண்டும்? ஒரு தேசபக்தன் நாட்டில் நீதியை விரும்புகிறான்.
ஒரு தேசபக்தன் இந்தியா முன்னேறி வல்லரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறான். எனவே நீங்கள் வல்லரசாகி சீனாவை விட முன்னேற விரும்பினால், ஒருவர் 90 சதவீத மக்கள் பலத்தைப் பயன்படுத்த வேண்டும். தேசபக்தர்என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களில் ஒரு சதவீதம் பேர் எக்ஸ்ரே கண்டு பயப்படுகிறார்கள். 10 ஆண்டுகளாக மோடி தான் ஓபிசி என்று கூறினார். ஆனால் நான் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய உடனேயே ஜாதிகள் இல்லை என்று கூறினார்.
ஜாதிகள் இல்லை என்றால் நீங்கள் எப்படி ஓபிசி ஆவீர்கள்?. அப்படியென்றால் எனக்கு ஜாதி இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். இப்போது அவர் பணக்காரர் மற்றும் ஏழை என்று இரண்டு ஜாதிகள் இருப்பதாக கூறுகிறார். அப்படிச் சொன்னால், ஏழைகளின் பட்டியலை எடுங்கள். அதில் தலித், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் இடம் பெறுவார்கள். தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினரின் கவனத்தை திசை திருப்புவதை பாஜ நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவர்களுடைய பிரச்சனை என்னவென்றால், உங்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கவனத்தை திசை திருப்ப முடியும். இங்கு என்ன நடக்கிறது என்று ஓபிசியினர் கேட்கும் நேரம் வந்துவிட்டது. ராமர் கோவில் கட்டப்பட்டது. அங்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஒருவரை நாங்கள் பார்க்கவில்லை. நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. அங்கும் அவர்களை பார்க்க முடியவில்லை. எத்தனை தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழை பொது சாதிகள் உள்ளனர் என்பதையும், பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பையும் நாடு அறியும்.இவ்வாறு அவர் பேசினார்.