பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யும் திட்டத்தை பெங்களூரு விதானசவுதாவில் முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பெங்களூரு விதானசவுதாவில் அரிசி திட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்து முதல்வர் சித்தராமையா பேசும்போது, ‘ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உணவு கழகத்திடம் தேவைக்கு அதிகமான அரிசி கையிருப்பில் உள்ளது.
ஆனால் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரிசி வழங்க மறுத்து வருகிறது. மாநிலத்துக்கு அரிசி வழங்க மீண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். மீண்டும் மறுத்தால், தனியாரிடம் அரிசி பெறுவதற்காக டெண்டர் விட்டு, அரிசி டெண்டர் எடுக்கும் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து வழங்கப்படும். இதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும்.
அன்னபாக்யா திட்டத்தில் பயனாளிகளுக்கு ரொக்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாங்கள் தொட வேண்டிய மையில் கல் அதிகமுள்ளது. பயனாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவோம். அதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் தொடங்கி விட்டோம். விரைவில் நியாயவிலை கடைகள் மூலம் அரிசி வழங்கப்படும். அதுவரை வங்கியில் பணம் டெபாசிட் செய்வது தொடரும்’ என்றார்.