பரேலி: கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகளில் போலீசாரால் என்கவுன்டரில் தேடப்படும் பிரபல ரவுடி சோனு கனோஜியா நேற்று பா.ஜவில் இணைந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத்தள்ள போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். பா.ஜவுக்கு ஆதரவாக மாறாத ரவுடிகள் மீதுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சமீபத்தில் கூட சிறையில் முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில் உபி மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சோனு கனோஜியா நேற்று பா.ஜவில் இணைந்தார். ஆம்லா எம்பி தர்மேந்திர காஷ்யப்பின் முகாம் அலுவலகத்தில் நடந்தவிழாவில் அமைச்சர் தரம்பால் சிங் முன்னிலையில் அவர் பா.ஜவில் இணைந்தார். அவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, நில அபகரிப்பு உள்ளிட்ட 21 வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் என்கவுன்டரில் தேடி வந்தனர். சமாஜ்வாடி கட்சியில் இருந்த அவர் தற்போது பா.ஜவில் இணைந்துள்ளார்.