சென்னை: சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தனது உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக அதே மாவட்டத்தை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்று அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த ராஜேஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுப்பையா மீது அவதூறாக பேசுதல், தானாக சென்று தாக்குதல் நடத்தியது, மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.