கொல்கத்தா: பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக மேற்கு வங்க மாநிலம் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் காங்டாக்கில் சுமார் 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேலும் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து மேற்கு வங்க மாநிலம் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் காங்டாக் உட்பட சுமார் 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
கொல்கத்தாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சால்ட் லேக் மற்றும் ஹவுரா பாஸ்போர்ட் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் குடியிருக்கும் ஹவுராவின் உலுபெரியாவில் உள்ள வீட்டில் அதிகாரிகள் நேற்று காலை முதலே சோதனை நடத்தினார்கள். மேலும் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் அவரை கைது செய்து அதிகாரிகள் அழைத்து சென்றனர். போலி ஆவணங்களுக்கு பாஸ்போர்ட் விநியோகித்தது தொடர்பாக 16 அதிகாரிகள் உட்பட 24 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 பேரை கைது செய்துள்ளனர்.