சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் (37). டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை மகா சிவராத்திரியை முன்னிட்டு அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை ஏற்றிக் கொண்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தார். சங்கரன்கோவில் நகர பகுதியில் வரும்போது பைக் மற்றும் ஆட்டோ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வேன் டிரைவர் முருகனை தாக்கியதில் மயங்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை உறவினர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தென்காசி எஸ்பி சுரேஷ்குமார், நெல்லை எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முருகனின் மைத்துனர் சங்கர்குமார் (30) கொடுத்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 3 போலீசார் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.