மதுரை: நீதிபதி வீட்டு முன் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜவினர் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் மற்றும் அக்கட்சி குறித்து, டிவிட்டர் பக்கத்தில் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவதூறாக பதிவிட்டார். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சி சார்பில் மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார், சென்னை தி.நகரில் பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து, மதுரை ஜேஎம் 1 (பொ) மாஜிஸ்திரேட் ராமசங்கரன் இல்லத்தில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் கொண்டு வந்தனர். அப்போது கைதை கண்டித்து பாஜ கட்சியினர், மாஜிஸ்திரேட் இல்லம் அருகே மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட மதுரை மாவட்ட பாஜ தலைவர் மகா சுசீந்திரன், 5 பெண்கள் உட்பட 43 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.