சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019ம் ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இதுவரை 5,500 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.