குருகிராம்: அரியானாவை சேர்ந்த தொழிலதிபருடன் சரக்கு அடித்த நபர், அவரது காரை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அமித் பிரகாஷ் (30) என்பவர், கோர்ஸ் சாலையில் உள்ள லேக்ஃபாரெஸ்ட் ஒயின் ஷாப்பில் விலையுயர்ந்த மதுபானங்களை வாங்கினார். ரூ.2,000 விலையுடைய மதுபானத்திற்கு, அதற்கு அதிகமான தொகையை கடை உரிமையாளரிடம் கொடுத்தார்.
சரக்கை வாங்கிக் கொண்டு தனது கார் இருக்கும் இடத்திற்கு வந்தார். காருக்குள் அமர்ந்து கொண்டு சரக்கு அடித்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த ஒருவர், காருக்குள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் அமித் பிரகாஷை பார்த்து, ‘நானும் கம்பெனிக்கு வரலாமா?’ என்று கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த அமித் பிரகாஷ், அந்த நபரையும் காருக்குள் வரழைத்து சரக்கை ஊற்றிக் கொடுத்தார். இருவரும் சரக்கு அடித்தனர். ஒரு கட்டத்தில் புல் போதையில் இருந்த அமித் பிரகாஷ், தனது சுய நினைவை இழந்தார்.
பின்னர் அவரை காரில் அழைத்து செல்வதற்காக, அந்த நபரே போதையில் காரை ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் அமித் பிரகாஷை காரில் இருந்து இறங்கும்படி கூறினார். தன்னுடைய கார் என்று கூட தெரியாமல் இருந்த அமித் பிரகாஷ், ஒன்றும் புரியாமல் காரை விட்டு கீழே இறங்கினார். அதன்பின் அந்த நபர் காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார். சில மணி நேரங்களுக்கு பின்னர் தான், தனது காரை ஒருவன் திருடிச் சென்றுவிட்டான் என்பது அமித் பிரகாஷூக்கு தெரிந்தது. பின்னர் ஒரு ஆட்டோவை பிடித்து தனது வீடுபோய் சேர்ந்தார்.
நடந்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரில், காரை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் கார் மட்டுமின்றி காருக்குள் இருந்த லேப்டாப், ரூ.18,000, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றுடன் கொள்ளையடித்து தப்பிச் சென்றது தெரியவந்தது.