மும்பை: மும்பையில் வசித்து வந்த பிரபல பாலிவுட் திரைப்பட பின்னணி பாடகி சாரதா ராஜன் (89), கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் அவரது இல்லத்தில் திடீரென காலமானார். இதனை அவரது மகள் சுதா மதேரியா உறுதிப்படுத்தினார். அவர் அளித்த பேட்டியில், ‘எனது தாய் சாரதா ராஜன், அவரது வீட்டில் தனது இறுதி மூச்சை விட்டார். கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோய் குணமடைய தொடர் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நம்முடன் இல்லை.
ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி சாரதா ராஜன் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சாரதா என்றழைக்கப்படும் சாரதா ராஜன், கடந்த 1960ம் ஆண்டுகளில் இந்தித் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். ‘பாத் ஜரா ஹை ஆப்ஸ் கி’ பாடலுக்காக அவர் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். அவரது மறைவு பாலிவுட்டில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.