ஒட்டாவா : கனடாவில் முதியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிரக்கும் மோதியதில் 15 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் 25 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து மீது டிரக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் முதியவர்கள் ஆவர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மனிடோபாவில் இருந்து வரும் செய்தி நம்பமுடியாத துயரமானது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.