மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் கைவல்யா வோஹ்ரா என்பவர் 2001ம் ஆண்டு பிறந்தார். மும்பையில் உள்ள பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இதற்குப் பிறகு பொறியியல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் ஸ்டாபோர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், தனது நண்பர் ஆதித் பாலிச்சாவிடம் ஒரு ஆலோசனையை பகிர்ந்து கொண்டார். ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பின்னர், இருவரும் சேர்ந்து ‘இ-மளிகை’ நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
பின்னர் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இருவரும், ‘ஜிப்டோ’ என்ற ஆன்லைன் வர்த்தக சேவையை 2021ம் ஆண்டு தொடங்கினர். தங்களது படிப்ைபயும் பாதியில் நிறுத்திவிட்டு, ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டினர். தற்போது அந்த நிறுவனம் மக்களிடையே பிரபலமானதால், அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ.7,300 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கைவல்யா வோஹ்ராவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1,200 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக இளைய கோடீஸ்வரர் என்ற பெயரை தனது 22வது வயதில் பெற்றுள்ள கைவல்யா வோஹ்ராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.