சென்னை: திமுக அரசு அமைந்த பிறகு ஒரு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பேருந்தில் மகளிருக்கு இலவசம் திட்டம் முதல்வருக்கு பெரும் பேரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கிறது. இது கண்டு பொறுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசின் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் பொய்யும் புரட்டுமாய் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எங்கேயும் பேருந்துகள் நிறுத்தப் படவில்லை. 2000 வழித்தடங்களை எடப்பாடி ஆட்சியில் தான் முடக்கிவிட்டனர். புதிய பேருந்துகள் 4300 வாங்கப்பட இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிசாமி பொய்களை பரப்ப முயன்று, மக்களிடம் அவமானப்படாமல் ஒதுங்கியிருப்பது நல்லது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.