தென்காசி: தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி ராஜா நகர் பகுதியில் நந்தனா என்பவர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்காக கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ரஜினி பாபு என்பவர் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் வீட்டின் கட்டிட வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்த போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சத்யராஜ் ₹46 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் கொடுத்து அனுப்பினர். இதனை நேற்று குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜிடம் ₹46 ஆயிரம் ரஜினி பாபு கொடுத்துள்ளார். அப்போது ₹40 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறியுள்ளார்.
இதையடுத்து ₹40 ஆயிரத்தை மட்டும் அவரது கையில் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால் சுதிர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் சத்யராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த காண்ட்ராக்டர் சவுந்தர்ராஜன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.