ஆவடி: கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி(50). கொத்தனார். இவரது மகளை கடந்த வாரம் கோயம்புத்தூரில் இருந்து திருவேற்காடில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் மகளை அழைத்துச் செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், ஆவடி ரயில் நிலையம் வந்தார். இவரை ஆவடி ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல இருசக்கர வாகனத்தில் இவரது உறவினர் மகன்(17) வந்திருந்தார். இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மணியை ஏற்றிக்கொண்டு ஆவடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
இந்நிலையில், ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அங்கு, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த நிலையில் அதன் ஓரத்தில் கொட்டப்பட்டு இருந்த கருங்கல் ஜல்லியில், இருவரும் நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்தனர்.
இதில், பின்னால் அமர்ந்திருந்த மணி இடதுப்புறம் விழுந்தார். அப்போது செங்குன்றத்தில் இருந்து பூந்தமல்லியை நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் விழுந்த மணி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இறந்த மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.