மதுரை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான வருங்கால வைப்புநிதி அலுவலருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் மென்பொருள் நிறுவனத்திடம் வருங்கால வைப்பு நிதி அலுவலர் கபிலன் ரூ.15 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மதுரை சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் முன் பணமாக ரூ.2 லட்சத்தை கபிலன் பெற்றபோது சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மனுவில் தன்மீது எந்த தவறும் இல்லை என்றும் மென்பொருள் நிறுவனம் அளித்த பொய் புகாரில் சிபிஐ அதிகாரிகள் தன்னை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகள், ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம்; மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமின் வழங்கியது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை மதுரை சிபிஐ அலுவலகத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.