ராய்ப்பூர்:காதலனுடன் தகராறு செய்து கொண்ட காதலி ஒருவர், 80 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டீஸ்கர் மாநிலம் கவுரேலா பேந்திரா மர்வாஹி மாவட்டம் பெந்திரா பகுதியில் வசிக்கும் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்போனில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.
காதலனிடம் கோபித்துக் கொண்ட காதலி, பெந்திரா பகுதியில் 80 அடி உயரத்தில் அமைந்துள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த காதலன், தனது காதலியை காப்பாற்றும் பொருட்டு அவரும் மின் கோபுரத்தின் மீது ஏறினார். கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவர்கள் இருவரும் உயர்மின் அழுத்த கோபுரத்தில் நின்று ெகாண்டிருப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதற்கிடையே தகவலறிந்த பெந்திரா போலீசார் மற்றும் கிராம மக்கள் மின் கோபுரத்தின் மீது உயிருக்கு ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த காதல் ஜோடியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீஸ் அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
இருவரையும் சமாதானப்படுத்தி போலீசார் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான நடத்தையில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.