Tuesday, May 14, 2024
Home » தோழியுடன் நெருங்கிய நட்பை கண்டித்ததால் காதலியை கழுத்து நெரித்து கொன்ற காதலன் கைது: விசாரணையில் பகீர் தகவல்

தோழியுடன் நெருங்கிய நட்பை கண்டித்ததால் காதலியை கழுத்து நெரித்து கொன்ற காதலன் கைது: விசாரணையில் பகீர் தகவல்

by Suresh

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷீபா (25). இவர், குண்ணவாக்கம் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்துள்ளார். இதற்காக நாள்தோறும் கம்பெனி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் தனியார் வேனில் சென்று வருவது வழக்கம். கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்ற ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், ஷீபாவின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் விசாரித்தனர்.

ஷீபாவின் செல்போனில் அதிக முறை அழைக்கப்பட்டிருந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். இதில் ஒரகடம் அருகே பண்ருட்டி பகுதியை சேர்ந்த தனியார் வேன் டிரைவர் சாமுவேல் (26) என்பவர்மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரை கண்காணித்து, நேற்று சாமுவேலை பிடித்து விசாரித்தனர். இதில் பல்வேறு பகீர் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சாமுவேல் ஓட்டி செல்லும் தனியார் வேனில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷீபாவும் அவரது தோழியும் சென்று வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சாமுவேலும் ஷீபாவும் காதலித்து வந்துள்ளனர். அதேபோல் ஷீபாவுடன் வந்த தோழியுடனும் சாமுவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது தெரிந்ததும் சாமுவேலை ஷீபா கண்டித்திருக்கிறார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாமுவேலை ஷீபா வற்புறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி ஷீபாவை சமாதானப்படுத்தி, வெளியூர் சென்று உல்லாசமாக இருக்கலாம், வா என சாமுவேல் கூறி அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் பைக்கில் சுங்குவார்சத்திரம் அருகே கோவளவேடு ஏரிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தனது தோழியுடனான நெருங்கிய தொடர்பை துண்டிக்க வேண்டும் எனவும் ஷீபா வற்புறுத்தியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமான சாமுவேல், தான் அணிந்திருந்த பனியனால் ஷீபாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது சடலத்தை அங்குள்ள ஏரி மதகுக்கு அடியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று மதியம் கோவளவேடு ஏரிக்கு சாமுவேலை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு ஷீபாவின் சடலத்தை வீசிய மதகு பகுதியை சாமுவேல் அடையாளம் காட்டினார். அங்கிருந்த ஷீபாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஒரகடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ஷீபாவை கொலை செய்த சாமுவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

five × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi