புழல்: புழல் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான தாய், குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் மனைவி சத்யாவுக்கு (22), கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரமேஷ் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் உள்ள அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழாவுக்கு நேற்று முன்தினம் உறவினர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த சத்யா திடீரென்று அலறிக் கூச்சலிட்டு அழுதபடி வெளியே ஓடிவந்து குழந்தையை காணவில்லை என்று அழுது புரண்டுள்ளார். இதனையடுத்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தை இறந்து கிடந்தது. தகவலறிந்து அங்கு வந்த சோழவரம் போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சத்யாவிடம் இதுபற்றி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், குழந்தையை அவரே கொன்றுவிட்டு நாடகமாடிய திடுக்கிடும் தகவல் வெளியானது. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது குழந்தை 8 மாதம், 20 நாளில் குறைப் பிரசவத்தில் பிறந்தது.
மேலும், குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் இல்லை. இதனால் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்ச உணர்வில் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதன் விளைவாக குழந்தையை கிணற்றில் வீசி கொன்றேன்’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சத்யாவை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். குறை பிரசவத்தில் பிறந்ததால் பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.