சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், அதனையடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலிலும், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பணியாற்றி வரும் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும்,
என்னை நேரில் சந்திக்க வரும்போதும், நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், மகிழ்ச்சி அடைவேன். இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.