இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மற்றும் கையெறி குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
பாகிஸ்தானில் வருகிற 8ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டா,குஸ்தார், தர்பத், உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள காவல்நிலையங்கள், துணை ஆணையர் அலுவலகங்களை குறிவைத்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 10 வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது. மேலும் 8கிலோ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. வெடிகுண்டு தாக்குதலில் 84வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் காயமடைந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான எந்த நிகழ்ச்சியும் நடைபெறாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் தாக்குதலுக்கான காரணங்கள் தெரியவில்லை.