கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக சீரான மின்சாரம் வழங்காததால் அவதிக்குள்ளான கிராம மக்கள் கையில் தீப்பந்தத்தை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மடத்தனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களின் மின்சார தேவைக்காக கிராமத்தின் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ட்ரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுது ஏற்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்படுவதில்லை. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ளவர்களே தங்களது சொந்த செலவில் ட்ரான்ஸ்பார்மரை சரி செய்துள்ளனர் ஆனால் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மீண்டும் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீரான மின்சாரம் வழங்கப்படாததால் பள்ளி மாணவ மாணவிகள் முதியவர்கள் என கிராம மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர் எனவே சீரான மின்சாரத்தை உடனடியாக வழங்க கோரி கிராம மக்கள் ஒன்றிணைந்து கையில் தீப்பந்தத்தை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.