மும்பை: மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக்கில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக மும்பை சிறப்பு என்ஐஏ நீதிமன்ற வாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னதாக அவர் தனது உடல்நலப் பிரச்னைகளைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரினார்.
அதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிபதி ஏ.கே.லாஹோதி, பிரக்யா சிங்குவுக்கு எதிராக ரூ.10,000 ஜாமீனில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தார். மேலும் மார்ச் 20ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு என்ஐஏவுக்கு உத்தரவிட்டார். இவ்வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்ய முன்வராவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது. சமீபத்தில் பாஜக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரக்யா சிங்கின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.