நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் தொகுதிகள் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனவே, காங். கட்சி சார்பில் 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் விலைவாசி உயர்வை விளக்கி நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்ய துவங்கி உள்ளனர்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சந்தை, பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோட்டீஸ் வழங்கி தங்களது தேர்தல் பணிகளுக்கு அச்சாரம் போட்டுள்ளனர். இந்த நோட்டீஸ்சில் கடந்த 2013-14ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம், பால், சிமென்ட், கம்பி ஆகியவற்றின் விலை, தற்போது 2023-24ம் ஆண்டு விலை சராசரி விலை அதிகரிப்பு குறித்து விவரமாக விளக்கி நோட்டீஸ் அடித்து வழங்கி வருகின்றனர். இதில், வெங்காயம் விலை 247.58 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.