திருவாரூர்: திருவாரூர் நீதிமன்றத்துக்கு பாஜ நிர்வாகி காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் வலங்கைமானை சேர்ந்த சேனாபதி (28), தினேஷ் (27) உட்பட பலரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்கு சேனாதிபதி, தினேஷ் ஆகியோர் காரில் நீதிமன்றத்திற்கு வந்தனர். அவர்களுடன் தேவங்குடியை சேர்ந்த பாரதி செல்வன் (26), கொரடாச்சேரியை சேர்ந்த விக்டர் தேவராஜ் (28) ஆகியோரும் வந்தனர்.
அப்போது நீதிமன்றத்திற்கு வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். இதில், வீச்சரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது. இதையடுத்து கார், ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் வந்த கார் திருவாரூர் மாவட்ட பாஜ துணைத்தலைவர் சதாசதீஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளுக்கு ஏன் பாஜ பிரமுகர் காரை கொடுத்து அனுப்பினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.