ஆண்டிபட்டி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை மக்கள் ஏற்காததால் அவர்களுக்கு ஆதரவாக நான் போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது ஒன்றிய அரசை விமர்சித்தேன். அந்த வீடியோவை தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்களில் போட்டு என்னை விமர்சித்து வருகிறார். உண்மையில் நான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்புகூட பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வெளியே வந்து, பாஜ 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என பேசிவிட்டு, தற்போது அந்த கட்சியை விமர்சித்து வருகிறார். இதிலிருந்தே தெரியவேண்டாமா, யார் பச்சோந்தி என்று. இவ்வாறு அவர் கூறினார்.