Tuesday, May 14, 2024
Home » பாஜவின் கடந்த கால தவறுகளை சமூக வலைதளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்ய வேண்டும்: நாற்பதும் நமதாகும், நாடும் நமதாகும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாஜவின் கடந்த கால தவறுகளை சமூக வலைதளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்ய வேண்டும்: நாற்பதும் நமதாகும், நாடும் நமதாகும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: பாஜவின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்யுங்கள். இதை சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும், நாடும் நமதாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைத்தளத்தில் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தின் இறுதி நாளான ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பேசஸ்-ல் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: உங்களின் பெரும்பாலான ‘ட்வீட்ஸ்-ஐ’ மன்னிக்க வேண்டும் டிவிட்டர் இப்போது, ‘எக்ஸ்’ ஆகிவிட்டது அல்லவா உங்களின் பெரும்பாலான ‘எக்ஸ்’ பதிவுகள் என்னுடைய கவனத்திற்கு வந்துவிடும். சிலரின் பதிவுகளை ரசித்துப் படிப்பேன். அதேசமயம், ஏதாவது குறையோ, புகாரோ சொன்னீர்கள் என்றால், உடனே அதை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். அந்த வகையில், உங்களோடு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்பாகத்தான் சமூக வலைத்தளங்களை பார்க்கிறேன். சக மனிதர்களிடம் நெருக்கமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களிடம் நம்முடைய கொள்கைகளை – சாதனைகளை சொல்லுங்கள். ஒரே வட்டத்திற்குள் நாம் சுருங்கிடாமல், வெவ்வேறு தளங்களை நாம் ‘ரீச்’-ஆக சமூக வலைத்தளங்கள் பயன்படுகிறது.

அதனால்தான், நான்கூட இப்போது ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ என்ற பாட்காஸ்ட் சீரிஸ்-ஐத் தொடங்கியிருக்கிறேன். ஏற்கனவே இரண்டு எபிஸோட் வந்துவிட்டது, விரைவாகவே அடுத்ததும் வரும். பார்லிமெண்ட் எலக்‌ஷனுக்கான என்னுடைய பிரசாரத்தை நான் தொடங்கிவிட்டேன், நாம் சேர்ந்து முன்னெடுப்போம்! வெற்றி பெறுவோம். இந்திய அரசியலில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக இருக்கும் நாம்தான், இந்த மாதிரி பாட்காஸ்ட் பிரசாரத்திலும் முன்னோடியாக இருக்கிறோம். அதனால்தான், இப்போது நம்முடைய கருத்துகள் மற்ற மொழி ஊடகங்களிலும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இந்தியாவுக்காகப் பேசுவோம், எபிஸோட் 1 & 2, இதுவரை பல லட்சம் பேரால் கேட்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பத்து, பதினைந்து மாநாடு நடத்தியதற்குச் சமம்.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஆதரித்து வெறுப்பை விதைக்கும் பா.ஜ.வால் அதன் கொள்கையை தமிழ்நாட்டில் பேச முடியாது. அதிமுகவிற்குக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது. எந்த பிரச்னைகளிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு கிடையாது. அதனால், அவர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி அவதூறு பரப்புவார்கள். அதற்கெல்லாம் யாரும் முக்கியத்துவம் தராதீர்கள். மக்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று உணர்ந்து விட்டாலே கூலிகளுக்குப் பதற்றம் வந்துவிடும். என்னதான் கத்தினாலும், சீண்டினாலும் தி.மு.க.காரர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்று அடிமைக் கும்பலுக்கு விரக்தி வந்துவிடும்.

பா.ஜ.விற்கு பொய் சொல்வது எந்த அளவிற்கு பழக்கம் ஆகிவிட்டது என்றால், பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பொய்களை உண்மை என்று நினைத்து நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பொய் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். நாம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? நமக்கு ஆக்கப்பூர்வமான நிறைய வேலை இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு எதிர் நோக்கியிருக்கும் பிரச்னைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். எவ்வாறு, நீட் தேர்வின் அபாயத்தை முன்பே உணர்ந்து, நாம் போராட ஆரம்பித்தோமோ, அவ்வாறு நிறைய வேலைகள் நமக்கு இருக்கிறது.

கள்ளக்கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வும் பா.ஜ.வும் பரப்பும் பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. ஆனால், நம்முடைய கொள்கைகளுக்கு வலிமை அதிகம், அதனால்தான், 75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இளமை மாறாமல் இருக்கிறது. மக்களும், ஆறு முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து, நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. ‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று நம்முடைய முழக்கத்தை சொல்லி வருகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது.

இந்தியா முழுவதும் நம்முடைய ’இந்தியா கூட்டணி’தான் வெற்றி பெற வேண்டும். அதற்கு பா.ஜ.வின் பொய் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக, கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல், பா.ஜ. பம்மாத்து செய்துகொண்டு இருக்கிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டும். ‘டைவர்ஷன் பாலிட்டிக்ஸ்’தான் அவர்களின் ஆயுதம். உண்மையான பிரச்னைகளைப் பற்றி எப்போதுமே பேச மாட்டார்கள். பிரச்னையே இல்லாத ஒன்றைப் பற்றி, திரும்ப திரும்பப் பேசிப் பிரச்னையாக ஆக்குவார்கள். அதற்கு சில ஊடகங்களும் துணை செல்லும். இதை கரெக்ட்டாக புரிந்துகொண்டாலே போதும். ‘சந்திராயன் விட்டோம். ஜி-20 மாநாடு நடத்தினோம்’ என்று பிரதமர் மோடி படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

அவர் இதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்று நினைவூட்டி, அந்த வீடியோக்களை அதிகம் பரப்புங்கள். ‘ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு, ரூ.15 லட்சம் கொடுப்போம்’ என்று பிரதமர் மோடி சொன்னதையும் ‘அதெல்லாம் உங்களை ஏமாற்றுவதற்காக சொன்ன ஜூம்லா என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னதையும் அதிகமாகப் பரப்புங்கள். “இந்திய மகள்களுக்காக இப்போது உருகுகிற மாதிரி நடிக்கும் பிரதமர் மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டபோது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மணிப்பூருக்குப் போய் பாதிக்கப்பட்டவர்களைப் பாத்தீர்களா?” என்று கேள்வி எழுப்புங்கள்.

“மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ. எம்.பி. மேல் சொன்ன பாலியல் புகார், பல மாத காலமாக பிரதமர் காதில் விழாமல் போனது ஏன்?” என்று கேள்வி எழுப்புங்கள். பா.ஜ.வின் கடந்த கால தவறுகளை சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப நினைவூட்டி பிரசாரம் செய்யுங்கள். இதைச் சரியாக செய்தாலே, நாற்பதும் நமதாகும், நாடும் நமதாகும். இந்த ’செப்டம்பர் – திராவிட மாதம்’, கலைஞரின் நூற்றாண்டில் வந்திருக்கிறது. கலைஞரின் உடன்பிறப்புகளாக, அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் திராவிடவியல் கோட்பாட்டைக் கொண்டு செல்வோம். அடுத்த ’செப்டம்பர் – திராவிட மாதத்தை, ‘வெற்றி விழாக் கொண்டாட்ட மாதமாகக் கொண்டாடுவோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

You may also like

Leave a Comment

17 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi