Friday, May 31, 2024
Home » பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடி நீக்கம்: அண்ணாமலையின் நடை பயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் பதவி பறிப்பு

பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடி நீக்கம்: அண்ணாமலையின் நடை பயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் பதவி பறிப்பு

by Mahaprabhu

சென்னை: பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து, தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. பாஜ தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமாக இருந்து வருபவர் சி.டி.ரவி. இவர் அண்மையில் நடந்த கர்நாடக தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் 5வது முறையாக களமிறங்கினார். அவரை எதிர்த்து 17 ஆண்டுகளாக அவரது நண்பராக இருந்த எச்.டி.தம்மையா, காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவை விட 5,926 வாக்குகள் குறைவாக பெற்று சி.டி.ரவி தோல்வி அடைந்தார். சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது சி.டி.ரவி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

நடைபயணத்தில் இருக்கும் போதே அவரின் தேசிய பொது செயலாளர் பதவியை பறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பாஜ தலைவர் ஜே.பி.நட்டா தேசிய தலைமையில் மாற்றம் செய்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பாஜவில் 13 துணை தலைவர்கள், 9 பொது செயலாளர்கள், 13 செயலாளர்கள் பதவிகளில் இருந்து சிலரை நீக்கியும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு பதவி நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேசிய பொது செயலாளராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சி.டி.ரவி, அசாமை சேர்ந்த திலிப் சாஹியா, உபியை சேர்ந்த வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, சுனில் தியோதர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தின் மக்களவை எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராதா மோகன் சிங், துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைப்பு செயலாளராக இருக்கும் பி.எல்.சந்தோஷ்க்கு, பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் ஆகியோருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில பாஜ முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் இருந்த போதே பாஜ தேசிய பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.டி.ரவி அண்ணாமலையின் மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். தற்போது சி.டி.ரவியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது அண்ணாமலைக்கும் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை பாஜ மேலிடம் செய்துள்ளது. அதே நேரத்தில் சி.டி.ரவி தமிழக பாஜ பொறுப்பாளர் பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தமிழக பொறுப்பாளராக வேறு ஒருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi