சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, சென்னை தியாகராய நகர் சரவணா நகர் மற்றும் திலக் தெரிவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுபோன்று தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகம் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஜோதிமணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதி மணி வீடு, ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், பாஜக தலைமை அலுவலக செயலாளர் சந்திரன் ஆகியோரை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், அமலாக்கத்துறை சோதனையானது ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக முன்பு பாஜக அல்லாதவர்கள் இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது பாஜகவினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.