பாட்னா: பீகார் சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் 11 பேரின் பதவிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் முடிவடைகின்றது. இதனை தொடர்ந்து மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 11ம் தேதியுடன் முடிவடைகின்றது. மனுக்களை திரும்ப பெறுவதற்கு 14ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர், துணை முதல்வர் சம்ராட் சவுத்ரி மற்றும் விஜய்குமார் சின்கா உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். மேலும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்எல்சி காலீத் அன்வரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.