* இம்முறை மக்களவை தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
* சுமார் 1.5 கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
* சுமார் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரம், 4 லட்சம் வாகனங்கள் தேர்தல் பணியில் பங்கேற்கும்.
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான, இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு சவாலானதோ அதை விட பலமடங்கு அதிக சவால்கள், இத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதில்தான் இருக்கிறது. அத்தகைய உலகின் கடினமான பணிகளில் ஒன்றைத்தான் நம் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
மக்களவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாகவே தொடங்கி விடுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அழியாத மை உள்ளிட்ட உபகரனங்களை அனுப்பி வைப்பது என படிப்படியாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் முதல் நிலை சோதனையை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இதில் இயந்திரத்தை தயாரிக்கும் பெல், இசிஐஎல் ஆகிய இரு பொதுத்துறை நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்படும். கோளாறு உள்ள இயந்திரங்கள் பொறியாளர்களிடம் வழங்கப்பட்டு சரி செய்யப்படும் அல்லது வேறு இயந்திரங்கள் பெறப்படும். அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் ஆகிய இரு இயந்திரங்களும் சரிபார்க்க போலி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதைத் தொடர்ந்து மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும். மாநில தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநில தேவைகளுக்கு ஏற்ப கூறும் மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்தலின் முக்கிய அம்சங்களில் ஒன்று பாதுகாப்பு. இதற்காக இம்முறை 3.4 லட்சம் துணை ராணுவ வீரர்கள் ரயில், கடல், சாலை மார்க்கமாக நாடு முழுவதும் பயணித்து பல இடங்களில் தேர்தல் பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடியும் வரை சுமார் 50 நாட்களுக்கு அவர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும். இதற்காக, ஒன்றிய உள்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள். இதுதவிர, வாக்கு செலுத்தியதும் வாக்காளர்களின் இடது விரலில் பூசப்படும் அழியாத மை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து நாடு முழுவதும் அனுப்பப்படும். கர்நாடகா அரசின் இந்நிறுவனம் 1962ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்திற்காக மட்டுமே இந்த மையை தயாரித்து வழங்கி வருகிறது.
ஒரு 10 மில்லி குப்பியில் 700 பேருக்கு மை வைக்க முடியும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1,500 வாக்காளர்கள் இருப்பார்கள் என்பதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 2 குப்பி மை தேவைப்படும். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தினத்தை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பில் பாதுகாக்கப்படும். பிறகு வாக்குகள் எண்ணப்படும் நாளில் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்படும். இவ்வளவு செயல்முறையும் துல்லியமாக செயல்படுத்துவதால் மட்டுமே இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அமைதியாக நடத்தப்படுகிறது.