சேலம்: கொச்சுவேலி-சாய்நகர் ஷீரடி பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ், நாளைய தினம் ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கிடையே தனியார் மூலம் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இதில், ஆன்மீக ஸ்தலங்கள், முக்கிய சுற்றுலா மையங்களுக்கு பாரத் கவுரவ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தவகையில், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் கொச்சுவேலியில் இருந்து ஈரோடு, சேலம் வழியே சாய்நகர் ஷீரடிக்கு பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ் நாளை (17ம் தேதி) இயக்கப்படுகிறது.
இதன்படி, கொச்சுவேலி-சாய்நகர் ஷீரடி பாரத் கவுரவ் ரயில் (06909), நாளை (17ம் தேதி) முற்பகல் 11.45 மணிக்கு கொச்சுவேலியில் புறப்படுகிறது. கொல்லம், காயங்குளம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு வழியே ஈரோட்டிற்கு இரவு 10.25க்கு வந்து, சேலத்திற்கு இரவு 11.20 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 5 நிமிடத்தில் புறப்பட்டு பந்தவாபுரா, ஹசன், பாகல்கோட், சோலப்பூர் வழியே சாய்நகர் ஷீரடிக்கு 21ம் தேதி (புதன்கிழமை) மதியம் 12.40 மணிக்கு சென்றடைகிறது. வழியில் பல்வேறு இடங்களில் பயணிகளை சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மறுமார்க்கத்தில், சாய்நகர் ஷீரடி-கொச்சுவேலி பாரத் கவுரவ் ரயில் (06910) வரும் 23ம் தேதி இயக்கப்படுகிறது. சாய்நகர் ஷீரடியில் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாசிக்ரோடு, பன்வால், ரோகா, மங்களூரு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டயம், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு வரும் 26ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.