ஐதராபாத்: இந்தியாவில் வயது வந்தவர்களிடையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளது. உலகளவில் காசநோய் பாதித்தவர்களில் 28 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோய்க்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த பயோபேப்ரி என்ற மருந்து கம்பெனி காசநோயை தடுக்க எம்டிபிவேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியின் திறனை சோதிக்க தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், செனகல் நாடுகளில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு காச நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயது வந்தவர்களிடையே தடுப்பூசியின் திறனை கண்டறிய இந்தியாவில் பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று தெரிவித்தது. குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பூசி உள்ளது. ஆனால் வயதானவர்கள்,இளம் பருவத்தினருக்கான காச நோய் தடுப்பூசி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது.