மும்பை: பெட்டிங் ஆப்ஸ் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாதேவ் ஆன்லைன் புக் என்ற பெட்டிங் ஆப்ஸ் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்சை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் சந்த்ரகார் திருமணத்துக்கு சுமார் ரூ.200 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளர் ரவி உப்பால், ஐக்கிய அரபு எமிரேட்டில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் திடீர் வளர்ச்சி, பெரிய அளவிலான பணப்புழக்கம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்களுக்கு சொந்தமாக கொல்கத்தா, போபால், மும்பை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தி,ரூ.417 கோடி பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த நிறுவனம் சட்ட விரோதமாக ஹவாலா பரிவர்த்தனை மூலம் பணத்தை சூதாட்டத்தில் முதலீடு செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதில் சினிமா பிரபலங்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ரன்பீர் கபூர், டைகர் ஷெராப், சன்னி லியோன் உட்பட சுமார் 20 திரையுலக பிரபலங்களுக்கு ஹவாலா முறையில் இந்த நிறுவனம் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த, இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வரும் 6ம் தேதி விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.