பெங்களூரு: பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்து அங்குள்ள பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் நடிக்க துவங்கிய பிறகு ரஜினிகாந்த் ஆக மாறியது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார்.
இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனிடையே, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பெங்களூரில் தன்னுடைய சகோதர் வீட்டிற்கு ரஜினிகாந்த் வருவது வழக்கம். அதன்படி பெங்களூரு வருகை தந்த ரஜினி, பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு திடீரென வருகை தந்து அனைவரையும் ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்தினார். பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து ரஜினிகாந்த் உரையாடினார். தன்னுடைய பழைய நினைவுகளை பணிமனை ஊழியர்களுடன் ரஜினிகாந்த் பகிர்ந்துக்கொண்டார்.
அதே பணிமனையில் டிரைவராக பணியாற்றிய பழைய நண்பர் ராஜ்பகதூரை அழைத்துச் சென்று மலரும் நினைகளை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து பணிமனையில் இருந்த ஊழியர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி அங்கு சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.