புதுடெல்லி: ஐபோன்கள் தயாரிக்கும் பெங்களூரு ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் இன்போகாம் நிறுவனம் பெங்களூருவில் ஒரு ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலையை ரூ.1,040 கோடிக்கு வாங்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. இதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு ஆலையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.