பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 65வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்குமார் (22) இவர், மீது எம்கேபி நகர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை இவர், வியாசர்பாடி டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர், ஆகாஷ்குமாரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த ஆகாஷ்குமாரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக, வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கார்த்திக் (எ) வெட்டு கார்த்திக் (25), வியாசர்பாடி முல்லை நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தார். இவர்கள் முன்விரோத தகராறில் ஆகாஷ்குமாரை வெட்டியது தெரிந்தது. இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.