காஞ்சிபுரம்: குமரக்கோட்டம் முருகன் கோயிலில் பாலாலயம் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வரும் வைகாசி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் சன்னதிகள், கோயில் வளாகம் முழுவதும் புனரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி மூலவர் சன்னதி மற்றும் ரிஷி கோபுரம் தவிர்த்து மீதமுள்ள விமானங்களுக்கு, சிலா விக்கிரகங்களை அகற்றாமல் பாலாலயம் செய்யும் உற்சவம் நேற்று நடைபெற்றது. இந்த பாலாலய உற்சவத்தையொட்டி 47 பலகைகளில் சிலா விக்கிரகங்கள் வரையப்பட்டு யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
இந்த உற்சவத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி, செயல் அலுவலர்கள் தியாகராஜன், செந்தில்குமார், தொழிலதிபர் ராஜம் செட்டி உதயகுமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலாலய உற்சவம் நடைபெற்றதையொட்டி மூலவர் சன்னதியைத் தவிர பிற சன்னதிகள் அனைத்தும் பக்தர்கள் தரிசனம் செய்யாத வகையில் மூடப்பட்டன. கோயிலில் வழக்கம்போல் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பூஜைகள் மற்றும் உள்புறப்பாடுகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.