விராலிமலை: புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் பால்ராஜ்(34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியா, விராலிமலை அருகே வில்லாருடை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி மகன் மூலம் செல்போனில் மனைவி பிரியாவை தொடர்பு கொண்ட பால்ராஜ், குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புவதாக கூறி விராலிமலை கோயிலுக்கு அழைத்துள்ளார். அங்குவந்தவரை பால்ராஜ் கத்தியால் சரமாரி குத்தினார். இதையடுத்து விராலிமலை போலீசார் பால்ராஜை கைது செய்தனர். புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பால்ராஜ், கடந்த 5 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்றுமுன்தினம் அதிகாலை தூங்கி கொண்டிருந்த 5 வயது மகள் நிதர்சனாவுடன், கட்டக்குடியில் உள்ள தர்மகுளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.