மீனம்பாக்கம்: மோசமான வானிலை காரணமாக, சென்னை-இலங்கை இடையே இயக்கப்படும் விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை ஒரு மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 2 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடையும். அதே விமானம் மீண்டும், சென்னையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு இலங்கையை சென்றடையும்.
இந்த இரு விமான சேவைகளும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இரவு நேர இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள், இன்று காலை 7.30 மணிக்கு, இலங்கையில் இருந்து சென்னை புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும், அதேபோல சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு இலங்கைக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திலும் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.