அம்பை: அம்பாசமுத்திரத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா மாசி மகா ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ம்தேதி அய்யா அவதார தினத்தன்று மாசி மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை 4 மணி அளவில் அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டது. இதனை டிஎஸ்பி சதீஸ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன்நின்று முறை நடத்தி மேற்கு நோக்கி வாகைபதி சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 41 பதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் அனுமன், பல்லக்கு, தொட்டில், கருடன், காளை, நாகம், வேல், பூபல்லக்கு போன்ற வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் சிறுவர் சிறுமிகளின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டைமேளமும், அய்யா ஹர, ஹர கோஷம் முழங்க ஊர்வலம் சென்றது. இதற்காக அம்பை மெயின்ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஊர்வலம் வாகைபதி வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு குடிமக்கள் செய்திருந்தனர்.