திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் கடந்த வாரம் வரை ரூ.5 க்கு விற்பனையான தக்காளி தொடர் மழை காரணமாக தற்போது ரூ.40க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தக்காளி சந்தைக்கு கடவூர், காக்கையாகவுண்டனூர், மலைப்பட்டி,புத்தூர், தென்னம்பட்டி, வடமதுரை, கொம்பேரிப்பட்டி, வளையசுட்டியபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தக்காளிகள் கொண்டுவரப்படுகின்றன.
சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவு வரை இப்பகுதியில் தக்காளி சாகுபடியை விவசாயிகள் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் நாள்தோறும் 100 டன் தக்காளி வரை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக பயிரிடப்பட்டுள்ள தக்காளிகள் அனைத்தும் சேதம் அடைந்தன. இதனால் 2 டன் தக்காளி வரையே சந்தைக்கு வருகிறது. இதனால் கடந்த வாரம் வரை ரூ.5 விலைபோன ஒரு கிலோ தக்காளி தற்போது கிடு கிடுவென உயர்ந்து ரூ.40 க்கு விற்பனையாகி வருகிறது. மழை நீடித்தால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விலையானது இன்னும் 3 மாதத்திற்கு தொடர வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.