அயோத்தி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் நேற்று புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவால் மற்றொரு நாளில் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருவதாக தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் அயோத்தி சென்றனர். அங்கு ராமர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் இரண்டு முதல்வர்களும் கலந்து கொண்டனர்.