லக்னோ: அயோத்திக்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகளை அங்கிருந்த பக்தர்கள் தாக்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, மாநில தலைவர் அஜய் ராய் ஆகியோர், கட்சி பிரதிநிதிகளுடன் அயோத்திக்கு சென்றனர். அவர்கள் தங்களது கட்சிக் கொடியுடன் கோயிலுக்கு வந்ததால் பக்தர்கள் கொதிப்படைந்தனர். இதற்கு காரணம், வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அந்த விழாவில் காங்கிரஸ் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டது.
அதனால் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்த பின்னர் ராமர் கோயிலின் பிரதான நுழைவாயில் முன்பு கூடியிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பக்தர்கள் தாக்கினர். பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த காங்கிரஸ் கொடியைப் பிடுங்கி எறிந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கையில் கொடியுடன் இருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் – பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.