சென்னை: சென்னை மாநகராட்சியுடன், பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து வரி செலுத்தும் முறையினை மேயர் பிரியா நேற்று ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் இணையதளம், வரி வசூலிப்பாளர்கள், பாரத் பில் பேமன்ட் சிஸ்டம், சென்னை மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், க்யூர் கோடு ஸ்கேன், விபிஎன் முகவரி, காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியுடன் பெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரியினை செலுத்தி ரசீதுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மேயர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த தானியங்கி இயந்திரங்கள் சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், வட்டார துணை ஆணையாளர்கள் அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் மஹாஜன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம் , நிலைக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன், மாநகர வருவாய் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.