Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு போலீஸ் வலை

செய்யூர்: செய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சுற்றி முற்றிலும் பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்த இரும்பு ராடால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ற சிலர் கத்தி கூச்சல்போட அந்த மர்ம நபர் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தலைமறைவானார்.  இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த செய்யூர் போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவியில் பதிவான ஆதாரத்தை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் செய்யூர் பஜார் பகுதியில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் திருட்டு, பிக்பாக்கெட், கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதே பஜார் பகுதியின் அருகில்தான் காவல் நிலையம் அமைந்துள்ளதாகவும். ஆனால் ஒருநாளும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதேநிலை தொடர்ந்தால் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க கூடும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.