சென்னை: தென் இலங்கை,அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த் தேக்கம் பகுதியில் 90மிமீ மழை பதிவானது.
சென்னை, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், வானகரம், புழல், தாமரைப்பாக்கம், மதுரவாயல், எம்ஜிஆர் நகர், வளசரவாக்கம், அயனாவரம், திருவொற்றியூர், உள்ளிட்ட இடங்களில் 50மிமீ முதல் 20மிமீ வரை மழை பெய்துள்ளது. இதற்கிடையே, வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு வந்தது. பின்னர் அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி நோக்கி வருகிறது. அது நாளை மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 நாளில் அது புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 வரை இதே நிலை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். தெற்கு அந்தமான மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.