கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (34). இவர் வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியவர் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் தனது காரை ஓட்டிக்கொண்டு வந்தார். இதில், நந்திவரம் மலைமேடு அருகே வந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலை ஓரத்தில் இருந்த டீ கடையை இடித்து நொறுக்கி கொண்டு அதனை ஒட்டியபடி இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனைக்குள் புகுந்தது. இதனை கண்ட அதிர்ச்சியில் அங்கே சிகிச்சை பெற்று கொண்டிருந்த நோயாளிகள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதில், காரில் வந்த உதவி பேராசிரியர் விக்ரம் மற்றும் டீ கடையில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில வாலிபர் அஜித்குமார் (24) ஆகிய இருவரும் கார் மற்றும் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்டனர்.