திருப்பூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர், பொதுச்செயலாளர் சரத்குமார் தங்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் சரத்குமார் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர் தனக்கு ஒரு பத்து மணி நேரம் கொடுத்தால் சனாதனம் குறித்து தெளிவாக எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்.
சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வன்முறை கருத்துக்களை பரப்பிய வடமாநில சாமியார் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயர் அனைவரது ஆழ்மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது எனவும் சரத்குமார் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.