Wednesday, May 29, 2024
Home » ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் மாஜிஸ்திரேட் அறிக்கையளிக்க உத்தரவு

ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் மாஜிஸ்திரேட் அறிக்கையளிக்க உத்தரவு

by Karthik Yash

மதுரை: பல் பிடுங்கிய விவகாரத்தில் மாஜிஸ்திரேட் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், சிவசக்தி நகரைச் சேர்ந்த அருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மீது பொய் வழக்குப்பதிவு செய்த வி.கே.புரம் போலீசார், சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கினர். எனது 4 பற்களும் பிடுங்கப்பட்டன. பின்னர் என்னை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விபரங்களைக் கேட்டு அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால் எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே அம்பாசமுத்திரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என் மீதான வழக்கு விபரங்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் குறிப்பிடும் வழக்கு தொடர்பான விபரத்தை அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

* தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி
பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பிச் சென்ற விவகாரம், பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனித உரிமை மீறல்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் கூர்நோக்கு இல்லங்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்த ஆய்வு செய்து வருகிறோம். அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மீது எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது கூற இயலாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

14 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi